2026-ஆம் ஆண்டு பிறந்ததே தெரியவில்லை, அதற்குள் பிப்ரவரி மாதமும் விடைபெற தயாராகிவிட்டது. நாளை மறுநாள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ரயில் பயணம் முதல் சமையல் எரிவாயு விலை வரை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, உங்கள் குடும்ப பட்ஜெட்டை திட்டமிட உதவும்.
ரயில் பயணத்தில் புதிய நடைமுறை :
ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மார்ச் 1 முதல் ஒரு முக்கிய மாற்றம் காத்திருக்கிறது. இதுவரை முன்பதிவில்லா டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளைப் பெறப் பயன்படுத்தப்பட்ட ‘யுடிஎஸ்’ (UTS) செயலி இனி செயல்படாது. பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் இதன் சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக, அனைத்து ரயில் சேவைகளையும் ஒருங்கிணைத்த ‘ரயில் ஒன்’ (RailOne) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 1 முதல் சீசன் டிக்கெட் அல்லது பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க விரும்புவோர் ‘ரயில் ஒன்’ செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
சிலிண்டர் விலை மற்றும் அகவிலைப்படி உயர்வு :
வழக்கம் போல மாதத்தின் முதல் தேதியான மார்ச் 1 அன்று, சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சமையல் எரிவாயு மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர் விலைகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாதம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தரவுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளது. இது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் கணிசமான உயர்வை ஏற்படுத்தும்.
சிம் கார்டு மற்றும் வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடுகள் :
டிஜிட்டல் மோசடிகளை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘சிம் பைண்டிங்’ (Sim Binding) விதிமுறை மார்ச் 1 முதல் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, உங்கள் மொபைலில் இருந்து சிம் கார்டை அகற்றிவிட்டால், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் உடனடியாகச் செயல் இழந்துவிடும். சிம் கார்டு இல்லாமல் வைஃபை மூலம் மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கணினியில் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்அப் வெப்’ வசதி இனி 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும். பயனர்கள் பாதுகாப்பு கருதி மீண்டும் லாகின் செய்ய வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய மாற்றங்கள் மார்ச் மாத தொடக்கத்திலேயே அமலுக்கு வருவதால், பொதுமக்கள் புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகிறது.
Read More : மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவுக்கு மத்தியில் பரபரப்பு அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்..!!



