தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களை காக்கவும், விளிம்புநிலை மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கவும் தமிழக அரசு 2 முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆவின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ள அதே வேளையில், தலைநகர் சென்னையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் மார்ச் மாத ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரவுள்ளன.
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று ஈனும் காலச் சுழற்சி காரணமாகப் பால் உற்பத்தி இயல்பை விட குறையக்கூடும். இதனைச் சரிசெய்யவும், தீவனச் செலவு அதிகரிப்பால் ஏற்படும் நிதி இழப்பிலிருந்து விவசாயிகளை மீட்கவும் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் பி.குமரேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி மற்றும் மார்ச் (2026) ஆகிய இரண்டு மாதங்களுக்குப் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வரும் ரூ.3 ஊக்கத்தொகையோடு சேர்த்து, இனி லிட்டருக்கு மொத்தம் ரூ.4 ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் உள்ள 780 கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் சுமார் 5.75 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை சீராகப் பராமரிக்க இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தமிழக முதலமைச்சரின் முன்னோடித் திட்டமான ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மார்ச் மாத அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைவால் ரேஷன் கடைக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று பொருட்கள் வழங்கும் இந்தப் பணி, வரும் மார்ச் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணாநகர், அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களிலும் இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் நேரடியாகப் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை ஒப்படைப்பார்கள். இது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் விநியோக தேதிகள் அந்தந்த ரேஷன் கடைகளின் தகவல் பலகைகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Read More : தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது..? வெளியாகிறது அதிகாரப்பூர்வ தேதி..!! பரபரப்பு தகவல்..!!



