திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை அடுத்த பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருதமுத்து (எ) முத்தன் (42), செங்கல் சூளை அதிபரான இவர், அதிமுகவில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மருதமுத்து தனது நண்பர் கிருபாகரனுடன் பெரியகோட்டை – வன்னியபட்டி சாலையில் உள்ள சந்தனவர்தினி ஆற்றுப்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கிருபாகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட, மருதமுத்து மட்டும் அக்கும்பலிடம் சிக்கிக்கொண்டார்.
உயிருக்கு பயந்து அங்கிருந்த தென்னந்தோப்பிற்குள் அவர் ஓடிய போதிலும், விடாமல் துரத்திய அந்த கும்பல் அவரைச் சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த மருதமுத்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர், மருதமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தொழில் ரீதியான பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக நிலவி வந்த முன்விரோதமே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர் ஒருவர் தோப்பிற்குள் துரத்திக் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.



