உத்தரப்பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தில், பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைத்த திருமணம், முதலிரவு அறையிலேயே விவாகரத்தில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மிதிலேஷ் குமாரி, தான் ஒரு இளைஞரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகளின் காதலை ஏற்க மறுத்த பெற்றோர், அவருக்கு தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் திருமணத்தை உறுதி செய்தனர்.
தனக்கு இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்று மிதிலேஷ் குமாரி எவ்வளவோ போராடியும், பெற்றோர் அவரை மிரட்டி, அடித்துத் துன்புறுத்தித் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்துள்ளனர். திட்டமிட்டபடி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு, மணமக்கள் முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது, தனது கணவர் தரம் சிங்கிடம் தனது காதலைப் பற்றியும், பெற்றோர் தன்னை எப்படி கட்டாயப்படுத்தி இந்த மேடைக்கு அழைத்து வந்தார்கள் என்பதையும் மிதிலேஷ் குமாரி உடைத்துப் பேசியுள்ளார். “உங்களுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது” என்று அவர் உறுதியாக தெரிவித்ததை கேட்டு தரம் சிங் அதிர்ச்சியடைந்தாலும், அந்தச் சூழலை அவர் மிகவும் நிதானமாக கையாண்டுள்ளார்.
மறுநாளே இந்த விவகாரம் ஹாமீர்புர் காவல் நிலையம் வரை சென்றது. இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போதும், மிதிலேஷ் குமாரி தனது முடிவில் மாற்றமில்லை என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். இறுதியில், இரு குடும்பத்தினரும் பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வந்தனர். அதன்படி, மிதிலேஷ் குமாரி மற்றும் தரம் சிங் ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து செய்து வைக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
“இந்த உண்மையை மிதிலேஷ் முன்னரே என்னிடம் சொல்லியிருந்தால், இரு குடும்பங்களுக்கும் இவ்வளவு பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்காது” என தரம் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமக்கள் பிரிந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் விவாத பொருளாக மாறியுள்ளது.
Read More : “குஷ்புவின் 38 கிலோ வெயிட் லாஸ் ரகசியம்”..!! ஜிம்முக்கே செல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி..?



