மத்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை தரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சொத்து பரிவர்த்தனைகளின் போது பான் (PAN) எண் விவரங்களை குறிப்பிடுவதில் நிலவி வந்த சில நடைமுறை சிக்கல்களை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பான் கார்டு கட்டாயம் :
தற்போதைய சட்டப்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீடு போன்ற அசையா சொத்துகளை வாங்கும்போது, வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகிய இருவருமே பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதால், சிறிய நகரங்களில் கூட சாதாரணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் கார்டு தேவையுள்ளது. இதனைச் சீர்செய்யும் வகையில், பான் கார்டு சமர்ப்பிப்பதற்கான உச்ச வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வருமான வரித்துறை முன்மொழிந்துள்ளது.
ஊரக பகுதிகளுக்கு கிடைக்கும் பலன் :
புதிய விதிமுறை அமலுக்கு வரும் பட்சத்தில், ரூ.20 லட்சத்திற்கு குறைவான மதிப்புள்ள சொத்துக்களை வாங்குபவர்கள் பான் எண் இல்லாமலேயே ஆவணப் பணிகளை முடிக்க முடியும். இது குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் முதல் முறையாக வீடு வாங்கும் எளிய மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும், சொத்துக்களைப் பரிசாகப் பெறுதல் அல்லது கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்கள் (Joint Development Agreements) போன்ற விவகாரங்களிலும் குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் பான் கார்டு விதிகள் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது அமலுக்கு வரும்..?
விலைவாசி மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு நிபுணர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இது பொதுமக்களின் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டால், வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது ரியல் எஸ்டேட் துறையில் சிறிய அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : “குஷ்புவின் 38 கிலோ வெயிட் லாஸ் ரகசியம்”..!! ஜிம்முக்கே செல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி..?



