அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல வளைகுடா நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களும் விவரிக்கப்பட்டன. மேற்கு ஆசியா முழுவதும் வசித்து வரும் பெரிய அளவிலான இந்திய குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து குழு தீவிர கவலை தெரிவித்தது.
பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் “இந்தப் பிராந்தியத்தின் வழியாக பயணம் செய்யும் இந்திய பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள், திட்டமிட்ட தேர்வுகளுக்காக செல்லும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மேலும் பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிக நடவடிக்கைகள் மீது ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அமைச்சரவை உத்தரவிட்டது. விரைவில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, உரையாடல் மற்றும் தூதரக வழிமுறைகளுக்கு திரும்புவது அவசியம் என்பதையும் அமைச்சரவை வலியுறுத்தியது.” என்று தெரிவித்துள்ளது..
மேற்கு ஆசியாவில் சுமார் 96 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வேலை செய்து வருகின்றனர். இதில் சுமார் 10,000 பேர் ஈரானில் உள்ளனர். பல நாடுகள் தங்களின் வான்வெளியை மூடியுள்ள நிலையில், வளைகுடா பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகி வருவதால், இந்திய அரசு நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறது.
முக்கிய வளைகுடா விமான நிலையங்கள் வழியாக பயணம் செய்த இந்தியர்கள் பலர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் சிக்கித் தவிப்பது குறித்தும் CCS ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட நாடுகளில் தேர்வுகளுக்குச் செல்ல வேண்டிய மாணவர்களின் நிலைமை, மேலும் இந்த மோதல் பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உதவ தேவையான மற்றும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சரவை உத்தரவிட்டது. ஆனால், பல நாடுகளில் வான்வெளி மூடப்பட்டிருப்பதும், பாதுகாப்பு நிலைமை மிகவும் அசாதாரணமாக இருப்பதாலும், உடனடி வெளியேற்ற நடவடிக்கைகள் (evacuation) குறித்து இந்தியா தற்போது பரிசீலிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணத்தை முடித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு தாமதமாக டெல்லி திரும்பிய பிறகு இந்த அமைச்சரவை குழு நடைபெற்றது. அந்தப் பயணத்தின் போது, மதுரையில் பல வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த CCS கூட்டம், இந்தியாவுக்கு டிப்ளோமாட்டிக் ரீதியாக மிக முக்கியமான சூழ்நிலையில் நடைபெற்றது.
இதற்கு சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் நாடாளுமன்றமான க்னெஸெட்டில் உரையாற்றி, இந்தியா–இஸ்ரேல் உறவை “சிறப்பு மூலோபாய கூட்டாண்மை” என்ற நிலைக்கு உயர்த்தினார். அந்தப் பயணம், இஸ்ரேலுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வலுவான அரசியல் செய்தியைக் கொண்டிருந்தது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இஸ்ரேல்–ஈரான் மோதல், இந்தியாவை மிகவும் நுட்பமான சமநிலை நிலைக்கு தள்ளியுள்ளது. ஒரு பக்கம் பிராந்திய நாடுகளுடன் உள்ள மூலோபாய உறவுகளை பாதுகாக்க வேண்டும், மற்றொரு பக்கம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) ஏற்கனவே ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெஹ்ரான், டெல் அவிவ், அபுதாபி மற்றும் டமாஸ்கஸ் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் ஹெல்ப்லைன் சேவைகளை தொடங்கி உள்ளன.. மேலும், அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் மற்றும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தனித்தனியாக பேசியுள்ளார். இந்த நிலைமை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை அவர் தெரிவித்ததுடன், கட்டுப்பாடு மற்றும் அமைதி அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
முன்னதாக மத்தியவெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பதற்றத்தை குறைக்க உரையாடலும் தூதரக வழிகளும் பயன்படுத்தப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்” என இந்தியா தெரிவித்திருந்தது.
போர் நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்பட்டு, அமைதி மற்றும் உரையாடலுக்குத் திரும்ப வேண்டும் என்பது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



