லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பெய்ரூத் நகரின் தெற்கு புறநகரங்கள் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் நடைபெற்ற இஸ்ரேல் எதிரி வான்வழித் தாக்குதல்களால், ஆரம்ப கணக்கீட்டில் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; 149 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் இராணுவம், தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனான் முழுவதும் தாக்குதல்களை தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் ஆயுதப்படை அமைப்புகளை குறிவைத்தே நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ ஹிஸ்புல்லா அமைப்பு ஏவிய ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, லெபனான் முழுவதும் அந்த தீவிரவாத அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுள்ளது. வெளியிட்ட அறிக்கையில், “அயத்துல்லா இமாம் சயீத் அலி அல்-ஹுசைனி காமெனியின் புனித இரத்தத்திற்கு பதிலடியாகவும், லெபனானையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காகவும், இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாகவும், ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளது.
நவம்பர் 2024-ல், இஸ்ரேல்–ஹெஸ்புல்லா இடையே ஒரு ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் (ceasefire) செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு, ஹிஸ்புல்லா சார்ந்த இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தியதாக கூறி வருகிறது. அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ள முதல் சம்பவம் இதுவாகும்.
இன்று அதிகாலை பெய்ரூத்தில் பலத்த வெடிச்சத்தங்களை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. லெபனான் அரசின் செய்தி நிறுவனமான என்.என்.ஏ, ஹெஸ்புல்லா அதிக செல்வாக்கு கொண்ட பெய்ரூத் தெற்கு புறநகரங்களைத் தொடக்கமாகக் கொண்டு, லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பெய்ரூத் தெற்கு புறநகரங்கள் மற்றும் நாட்டின் தெற்கு பகுதிகளில் இருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பிச் சென்றதாகவும் NNA தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம், பெய்ரூத் பகுதியில் உள்ள ஹெஸ்புல்லா போராளிகளையும், தெற்கு லெபனானில் இருந்த ஒரு போராளியையும் தாக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், லெபனான் பிரதமர் நவாஸ் சலாம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களை “பொறுப்பற்றதும் சந்தேகத்திற்குரியதும்” என்று விமர்சித்துள்ளார். ஹிஸ்புல்லா பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் தடுக்கவும், லெபனான் மக்களை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்” என்று அவர் கூறினார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த மோதலில் லெபனான் இழுக்கப்படக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பிறகே இந்த பிராந்திய மோதல் தொடங்கியதாகவும் லெபனான் அதிகாரிகள் முன்பே தெரிவித்திருந்தனர்.
அந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் அமெரிக்க ராணுவத் தளங்களை தங்கவைக்கும் நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



