தனது வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.. உயிரிழந்த பெண் 35 வயது சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டெல் (Dell) என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புனித் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். வீட்டில் அடிக்கடி சிறு பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவாதம் நடந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று சுஷ்மாவுக்கும் அவரது மாமியார் கல்பனாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கல்பனா தன்னை சமைக்க அனுமதிக்கவில்லை என்றும், பல்வேறு விஷயங்களுக்காக தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சுஷ்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கணவரின் தரப்பில் வரதட்சணை கொடுமை இருப்பதாக சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர், அதே நேரத்தில் மாமியாரைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.



