மாரடைப்பு என்பது திடீரென ஏற்படுவது என்று பலர் கருதுகின்றனர். ஆனால், அது ஏற்படுவதற்கு முன்பே நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இந்த அறிகுறிகளை நாம் முன்கூட்டியே அடையாளம் கண்டுகொண்டால், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்குச் சுமார் பத்து நாட்களுக்கு முன்பே தென்படும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்த 5 எச்சரிக்கை அறிகுறிகள்: வழக்கத்திற்கு மாறான சோர்வு: கடினமான வேலைகள் எதையும் செய்யாதபோதிலும், அதீத சோர்வும் மந்தநிலையும் ஏற்படுவதுண்டு. இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறையும்போது, உடல் இவ்வாறாகவே எதிர்வினையாற்றுகிறது. மூச்சு விடுவதில் சிரமம்: மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் மாரடைப்பின் ஒரு முக்கிய அறிகுறியாகும். மிகக் குறைந்த தூரம் நடந்தால்கூட அதீத சோர்வு ஏற்படுவது ஆபத்தானதாக அமையலாம்.
செரிமானப் பிரச்சினைகள்: நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இவை மாரடைப்பு ஏற்படுவதற்கு முந்தைய அறிகுறிகளாக இருக்கக்கூடும். தூக்கமின்மை: தூங்கும் முறையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதும், கடுமையான பதற்றம் உண்டாவதும் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளாகும்.
உடல் உறுப்புகளில் வலி: நெஞ்சுப் பகுதியில் மட்டுமல்லாமல், இடது கை, தாடை, முதுகு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளிலும் வலி ஏற்படுவது இதயப் பிரச்சினையைக் குறிக்கலாம்.
ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?
ஹார்வர்ட் ஹெல்த்’ (Harvard Health) வெளியிட்ட ஓர் ஆய்வின்படி, மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பே மேற்கூறிய அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். குறிப்பாகப் பெண்களிடத்தில், வழக்கத்திற்கு மாறான சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை முதன்மையான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இரத்தக் குழாய்களில் அடைப்புகள் உருவாகத் தொடங்கும்போதும், அதனால் இதயத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும்போதும் இந்த அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி, ஈ.சி.ஜி (ECG) போன்ற பரிசோதனைகளைச் செய்துகொள்வதே சிறந்தது. சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை நாம் திறம்படத் தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவு முறையையும், முறையான உடற்பயிற்சியையும் பின்பற்றுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Read More ; நீங்க பணம் செலுத்த UPI யூஸ் பண்றீங்களா..? இந்த அம்சங்கள் பற்றி தெரியலன்னா.. உங்களுக்கு தான் லாஸ்..!



