தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது..
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், இந்த ஆலோசனையில் இழுபறி நீடித்து வருகிறது..
பாஜக அதிக தொகுதிகளை கேட்பதாகவும், அதிலும் அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.. இதுவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்ட பிறகே மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அதிமுக கருதுகிறது.. இதனால் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதும் தாமதமாகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார்.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் இபிஎஸ் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்றிரவு சென்னைக்கு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்ல உள்ளார்..
டெல்லியில் அமித்ஷாவை நேரில் சந்திக்கும் இபிஸ், தமிழக அரசியல் நிலைமை, கூட்டணி அமைப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.. அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நீடிக்கும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
மேலும் நடிகர் விஜய்யின் தவெகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் நகர்வுகளும் அதிமுக வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.. இதனை சமாளிக்கும் வகையில் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று இபிஎஸ் கருதுகிறாராம்.. இதுகுறித்தும் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாம்..



