இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இருவருடைய திருமணமும் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெறவுள்ளது. அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும்..? இதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு வழங்கும் பரிசுக்கு ஒரு சில முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்கும் விதமாக கையினால் செய்யப்படும் மெழுவர்த்தி வழங்கப்படவுள்ளது. இந்த மெழுகுவர்த்தியை மகாபலேஸ்வரில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கின்றனர்.
இது இந்தியாவின் பாரம்பரிய கலைகளையும், கைவினை கலைஞர்களையும் சிறப்பிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கைத்தறி, ஆடை அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் மற்றும் கலைகளும் அங்கம் வகிக்கின்றன. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் ஸ்வதேஷ் திறமையான கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும், திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.