தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி பழனி தொகுதியில் போட்டியிட உள்ளார்.. அவருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்..
அப்போது பேசிய அவர் ” சினிமா மாடல் ஒன்று உள்ளது.. ஒரே சினிமாவில் பெரிய ஸ்டாராகி விடலாம்.. ஒரு சினிமாவுக்குள் டாக்டர் ஆகலாம், இன்ஜினியர் ஆகலாம்.. முதல்வராக கூட ஆகலாம்.. ஆனால் அரசியலுக்கு வந்த உடன் முதல்வராக முடியுமா? என் அளவிற்கு விஜய் அரசியல் பேசியது உண்டா? இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கும், மொழிக்கும், தன் மானத்திற்கும், பிரச்சனை வந்த போது வந்து விஜய் நின்றிருக்கிறாரா..?
உங்கள் மீது மக்கள் காட்டிய அன்பு திறமைக்கானது.. அரசியலுக்கானது. சினிமா திறமைக்கு மக்கள் காட்டிய அன்பை அரசியலுக்காக பயன்படுத்துவீங்களா? நடிகனுக்கு விசில் அடிக்கலாம்.. நாட்டை கொடுக்க கூடாது.. அரசியல் வேறு சினிமா வேறு.. அந்த அன்பு வேறு.. சினிமா வேறு.. திராவிட மாடல் வேண்டுமா? அடிமை மாடல் வேண்டுமா? சினிமா மாடல் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.. யாரை தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம்..
எந்த அணி நமக்காக நிற்கும் என்பதை யோசிக்க வேண்டும்.. இது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல் இல்லை.. விஜய் சொல்வது மாதிரி இது திமுகவுக்கும் தவெகவுக்கும் நடக்கும் தேர்தல் இல்லை.. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடக்கும் தேர்தல்..
தமிழ்நாடு எப்போதுமே இந்தியாவுக்கு ஒரு மாடலாக நின்றிருக்கிறது.. இந்தியை திணிப்பார்கள்.. நீட்டை திணிப்பார்கள்.. இதை எதிர்த்து நிற்க வேண்டும்.. இன்னும் வலுவாக எதிர்க்க வேண்டும் என்றால் எந்த அணிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்..” என்று தெரிவித்தார்..



