தமிழகத்தில் நிலம் வாங்கும் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக பட்டா மாறுதல் திகழ்கிறது. பத்திரப் பதிவு செய்தவுடன் அனைத்தும் முடிந்துவிட்டதாக பலர் நினைப்பது வழக்கம். ஆனால் உண்மையில், வருவாய்த் துறை பதிவுகளில் உங்கள் பெயர் இடம்பெறாதவரை, அந்த நிலத்தின் மீது முழுமையான உரிமை உங்களுக்கு கிடையாது என்பதே நிதர்சனம்.
பட்டா மாறுதல் என்பது, ஒரு நிலத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றும் அரசாங்க நடைமுறை. நிலம் வாங்கிய பிறகு, பத்திரப் பதிவு முதல் கட்டமாக இருந்தாலும், வருவாய்த் துறையில் உரிமையாளர் பெயரை மாற்றுவது மிகவும் அவசியமான இரண்டாவது கட்டமாகும். இந்த பட்டாவே அந்த நிலம் உங்களுக்கே சொந்தம் என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றாக கருதப்படுகிறது.
நிலம் வாங்குதல், பூர்வீக சொத்து பாகப்பிரிவு, அல்லது வாரிசு அடிப்படையில் சொத்து கிடைத்தல் போன்ற அனைத்து சூழல்களிலும் பட்டா மாறுதல் கட்டாயமாகிறது. தற்போது டிஜிட்டல் வசதிகள் வளர்ந்துள்ளதால், பட்டா மாறுதலுக்காக அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது.
தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கலாம். விற்பனைப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், பழைய பட்டா நகல், அடையாளச் சான்று போன்ற ஆவணங்கள் இருந்தால் போதுமானது. விண்ணப்பித்ததும், ஒரு குறிப்பு எண் வழங்கப்படும்; அதன் மூலம் விண்ணப்ப நிலையை கண்காணிக்க முடியும்.
பட்டா மாறுதலில் இரண்டு வகைகள் உள்ளன. முழு நிலத்தை வாங்கியிருந்தால் அளவீடு தேவையில்லை; இதனை உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் என்கிறார்கள். ஆனால் பெரிய நிலத்தில் ஒரு பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், நில அளவையாளர் வந்து அளவீடு செய்து எல்லைகளை உறுதி செய்வார். இது உட்பிரிவு பட்டா மாறுதல் எனப்படுகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையாளர் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் புதிய பட்டாவை வழங்குவார்.
பட்டா மாறுதல் செய்திருந்தால், வங்கி கடன் பெறுதல், வீடு கட்ட அனுமதி பெறுதல், அல்லது எதிர்காலத்தில் நிலத்தை விற்பனை செய்தல் போன்ற அனைத்து செயல்களும் எளிதாகும். மேலும், அரசு நிலம் எடுப்பு போன்ற சூழல்களில் இழப்பீடு பெறுவதற்கும் பட்டா முக்கிய ஆவணமாக அமைகிறது. எனவே, நிலம் வாங்கிய உடனேயே பட்டா மாறுதல் செய்வது உங்கள் சொத்து பாதுகாப்பிற்கான முக்கியமான படியாக வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
Read more: கோடைகாலத்தில் வெந்நீர் குடிக்கலாமா..? பலருக்கு தெரியாத நன்மைகள்..!



