உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திருமண ஊர்வலத்தின் போது ஒலித்த அதிக ஒலி கொண்ட டிஜே இசையால் தனது பண்ணையில் 140 கோழிகள் உயிரிழந்ததாக கோழிப் பண்ணை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு நடைபெற்றது. உள்ளூர்வாசியான பப்பன் விஸ்வகர்மாவின் மகளின் திருமண ஊர்வலம் கிராமத்தின் வழியாகச் சென்ற போது, அதில் பயன்படுத்தப்பட்ட டிஜே இசை மிக அதிக ஒலி அளவில் ஒலித்ததாக கூறப்படுகிறது. கிராமத்தில் கோழிப் பண்ணை நடத்தி வரும் சாபிர் அலி என்பவர் அளித்த புகாரில், இரவு சுமார் 9.30 மணியளவில் ஊர்வலம் தனது பண்ணை அருகே சென்றதாக தெரிவித்துள்ளார்.
அப்போது ஒலித்த கடும் சத்தம் கோழிகளிடையே திடீர் பீதியை ஏற்படுத்தியதாகவும், அதனால் 140 கோழிகள் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பார்சிபூரைச் சேர்ந்த டிஜே ஆபரேட்டர் கவி யாதவ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டிஜே இசை அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறியதா?, உண்மையில் அந்த சத்தமே கோழிகளின் மரணத்திற்கு காரணமா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிபுணர்கள் கூறுகையில், அதிக ஒலி அளவிலான சத்தம் பறவைகள் மற்றும் விலங்குகளில் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், சில நேரங்களில் உயிரிழப்பிற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் அதிக ஒலி பயன்படுத்துவது குறித்து மீண்டும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.



