படிக்கட்டுகளில் ஏறுவது சாதாரண தினசரி செயலாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு சவாலாக மாறி வருகிறது. குறிப்பாக, நடக்கும்போது எந்தவித சிரமமும் இல்லாமல் , படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ முழங்காலில் வலி ஏற்படுவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
இதே கேள்வியை ஒரு இணையப் பயனர் சமூக வலைதளத்தில் எழுப்பியதைத் தொடர்ந்து, இது ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில், பலரும் இதே அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். மருத்துவ ரீதியாக இதற்கு காரணம் என்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
செம்பூரில் உள்ள ஜென் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகேஷ் நாயர் கூறுகையில், “நடப்பது மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவது ஆகிய இரண்டிலும் முழங்காலுக்கு ஏற்படும் அழுத்தம் வேறுபட்டதாக இருக்கும். சமதளத்தில் நடக்கும் போது முழங்காலுக்கு குறைந்த அழுத்தமே இருக்கும். ஆனால் படிக்கட்டுகளில் ஏறும்போது உடல் எடையின் பெரும் பகுதியை முழங்கால் தாங்க வேண்டி வருகிறது” என்றார்.
மருத்துவர்களின் விளக்கப்படி, படிக்கட்டுகளில் ஏறும்போது முழங்கால் மூட்டு ஆழமாக வளைந்து அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இதுவே வலிக்குக் காரணமாகிறது. குறிப்பாக, “பட்டெல்லோஃபெமோரல் வலி நோய்க்குறி” (Patellofemoral Pain Syndrome) எனப்படும் நிலை இந்த வலிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த நிலை ஏற்பட்டால், முழங்கால் மூட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழுத்தம் அதிகரித்து வலி தோன்றும். அதே நேரத்தில், சமதளத்தில் நடக்கும் போது அந்த அழுத்தம் குறைவாக இருப்பதால், அப்போது வலி தெரியாமல் போகும்.
மேலும், இந்த அறிகுறி ஆரம்பகட்ட எச்சரிக்கை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை புறக்கணித்தால், பின்னர் கீல்வாதம், குருத்தெலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகளாக மாறும் அபாயம் உள்ளது. மருத்துவர் ராகேஷ் நாயர் மேலும் கூறுகையில், “தொடைத்தசைகள் பலவீனமாக இருப்பது, முழங்கால் அமைப்பு சரியாக இல்லாதது, அல்லது உடல் எடை அதிகரிப்பு போன்றவை இந்த வலியை அதிகரிக்கக்கூடும்” என எச்சரித்தார்.
Read more: மனிதர்களின் குறுகிய ஆயுளுக்கு டைனோசர்கள் காரணமா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்..!



