இந்தியா முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் ஏர் கண்டிஷனர்கள் (AC) ஆடம்பரப் பொருளாக இருந்து அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளன. அதிக பயன்பாடு காரணமாக ஏசி தொடர்பான கோளாறுகள் மற்றும் தீ விபத்து அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக முறையான பராமரிப்பு இல்லாதது, மின்சாரக் கோளாறுகள் மற்றும் தரமற்ற உதிரிப் பாகங்கள் பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
ஏசிகள் தீப்பிடிப்பதற்கான முக்கிய காரணங்கள்: ஏர் கண்டிஷனர்கள் அதிக மின்சுமை எடுத்துக்கொள்வதோடு சிக்கலான தொழில்நுட்ப பாகங்களையும் கொண்டுள்ளன. அவற்றை முறையாக பராமரிக்காதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
* முதலாவது காரணமாக மின்சாரக் கோளாறுகள் குறிப்பிடப்படுகின்றன. தளர்வான அல்லது பழுதான வயரிங் இணைப்புகள் தீப்பொறிகளை உருவாக்கி, மின்சுற்று குறுக்கீடுகள் மற்றும் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.
* இரண்டாவது காரணமாக இயந்திரம் அதிக வெப்பமடைவது குறிப்பிடப்படுகிறது. தூசி மற்றும் அழுக்கு காரணமாக வடிகட்டிகள் (filters) மற்றும் குளிரூட்டும் சுருள்கள் அடைபடும்போது காற்றோட்டம் தடைபட்டு, இயந்திரம் அதிக அழுத்தத்தில் இயங்கி சூடாகும் அபாயம் உள்ளது.
* மூன்றாவது காரணமாக குளிரூட்டும் வாயு (refrigerant gas) கசிவு உள்ளது. இது எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டதால், கசிவு மற்றும் மின்சார தீப்பொறி இணைந்தால் பெரிய விபத்துகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
பின்பற்ற வேண்டியவை: வீட்டில் விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசி பயன்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்:
* ஏசியின் வழக்கமான பராமரிப்பை (monthly/quarterly service) தவறாமல் செய்ய வேண்டும்
* மலிவான அல்லது போலியான உதிரி பாகங்களை பயன்படுத்தக் கூடாது
* டர்போ மோடு போன்ற அதிக சக்தி பயன்பாட்டை நீண்ட நேரம் தவிர்க்க வேண்டும்
* மின் இணைப்புகள் மற்றும் வயரிங் நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்
* வெளிப்புற யூனிட்டில் தேங்கும் தூசியை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்
வீட்டில் ஏசியைப் பாதுகாப்பது எப்படி? நிபுணர்கள் கூறுவதாவது, ஃபில்டர்கள் மற்றும் காயில்களை அடிக்கடி சுத்தம் செய்வது காற்றோட்டத்தை மேம்படுத்தி அதிக வெப்பமடைவதைத் தடுக்கும். மேலும், சான்றளிக்கப்பட்ட அல்லது அசல் உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஏசி இயங்கும் போது விசித்திர சத்தம், எரியும் வாசனை அல்லது குளிர்ச்சி குறைவு போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தொழில்நுட்ப நிபுணர்களை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், கடுமையான வெப்பநிலை காலங்களில் ஏசி அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ள நிலையில், முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளே தீ விபத்துகளைத் தடுக்கும் முக்கிய வழி என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Read more: பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவா..? திருமா சொன்ன பரபரப்பு பதில்..!



