இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்..
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா தனது படங்களுக்காக 6 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்..
நேற்று பாரதிராஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கா வைக்கப்பட்டது.. அவரது உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
மேலும் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவர் உடல் முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது..
இந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரத்தின் இந்த வேளையில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.” என்று குறிப்பிட்டுள்ளார்



