சட்டமன்ற தொகுதியில் வாக்கு குறைந்தால் அதற்கு மாவட்ட செயலாளரும், பொறுப்பு அமைச்சரும் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட கையோடு வேட்பாளர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர்மட்டத் பொறுப்பாளர்களுடன் பேசினார். எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சட்டமன்ற தொகுதியில் வாக்கு குறைந்தால் அதற்கு மாவட்ட செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு என்றார்.
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது மிகவும் முக்கியம். சமூக நீதி, மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் இனி பாஜக-வுக்கு கனவிலும் வரக்கூடாது. தொகுதி மட்டுமின்றி ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தை கண்காணிக்க உள்ளேன். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் முக்கியம். நீண்டகாலமாக தோளோடு தோளாக கொள்கை உணர்வுடன் கூட்டணி கட்சியினர் நம்மோடு பயணிக்கிறார்கள்.
நட்புணர்வோடு கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகள் பெற்று சில தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கேற்றவாறு கட்சி நிர்வாகிகள் களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.