தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த 9-ம் தேதி முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கிவைத்தார்.. சிங்கப்பெண் அதிரடி சிறப்புப்படை முதல்வர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இயங்குகிறது.. பெண் காவலர்களிடம் இருந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவலர்கள் தனித்து தெரியும் வகையில் சிறப்பு சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.. அடர் நீல நிற சட்டை, காக்கி பேண்ட், கருப்பு தொப்பி, தோள் பட்டையில் காக்கி பெல்ட், எடை குறைவான கருப்பு ஷூ என பிரத்யேக சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ள இடங்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை கண்காணிக்கும்.. பேருந்து ,ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி பெண்கள் அதிகம் கூடும் இடங்களை சிங்கப்பெண் அதிரடி படை கண்காணிக்கும்.. சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை செயல்படும்..
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் அப்பகுதி சிங்கப்பெண் படைக்கு தெரிவிக்கப்படும்.. சம்பவ இடத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்..
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான பிரத்யேக உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 1091 என்ற உதவி எண் மூலம் சிங்கப்பெண் அதிரடிப்படையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.. ஒவ்வொரு அழைப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
1091 உதவி எண்ணிற்கு அழைப்பு வந்த உடன் அந்த தகவல் உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். 1091 எண்ணிற்கு அழைப்பு வந்த உடன் அருகே உள்ள சிங்கப்பெண் அதிரடிப்படி அல்லது ரோந்து குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும். சிங்கப்பெண் சிறப்பு படை உதவி எண் 1091 அவசர கால சேவை 112 என்ற எண்ணுடன் இணைக்கப்பட்டதால் வேகமான தகவல் பரிமாற்றம் செய்யப்படும்.. 1091 என்ற உதவி எண் 112 என்ற அவசர கால உதவி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல், பின் தொடர்தல், மிரட்டல் அல்லது உடனடி காவல் உதவிக்கு 1091 என்ற எண்ணை அழைக்கலாம்..” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



