கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளிச் சீருடையில் இருந்த இரு மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீருடை அணிந்த நிலையில் மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பள்ளி வளாகத்திற்குள் மது பாட்டில்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அந்த மாணவிகளுக்கு அப்பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும், மாணவிகளுக்கு மது பாட்டில்களை வாங்கிக் கொடுத்ததிலோ அல்லது பள்ளிக்குள் எடுத்து வர உதவியதிலோ வெளி நபர்கள் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தின் முழுப் பின்னணியையும் கண்டறிந்து, இதில் ஏதேனும் நிர்வாகக் குறைபாடுகள் அல்லது பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதா என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.



