கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை ரோந்து சென்றபோது, வேட்டை கும்பல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 தமிழர்கள் உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காட்டில் காணாமல் போன தங்களது கால்நடைகளை தேடிச் சென்றவர்களையே வனத்துறையினர் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றுவிட்டு பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வனத்துறையால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கைப்பற்றப்பட்ட 2 நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், டார்ச் லைட்டுகள் மற்றும் இறைச்சியோடு, ‘பாரகன்’ பிராண்ட் புதிய செருப்பு ஜோடி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், அந்தப் புதிய செருப்பில் ஒட்டப்பட்டிருந்த விலைக் குறியீட்டு ஸ்டிக்கர் கூடப் பிரிக்கப்படாமல் அப்படியே இருப்பதும், அதில் எவ்வித மண் அல்லது ரத்தக் கறையோ இல்லாததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அடர்ந்த காட்டிற்குள் நடந்து சென்றவர்களின் காலணிகளில் மணல் அல்லது சேற்றுக் கறைகளோ இல்லாமல், விலை குறியீடு மாறாமல் புத்தம் புதிதாக எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயிரிழந்தவர்களின் உறவினர்கள், துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த வனத்துறையினரே திட்டமிட்டு போலி ஆதாரங்களை அங்கே கொண்டுவந்து வைத்துள்ளதாக சாடியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், இறைச்சி, தண்ணீர் பாட்டில் மற்றும் சர்ச்சைக்கிடமான அந்தப் புதிய செருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் விசாரணை அதிகாரியான சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் மீனாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. தங்களது உறவினர்கள் வேட்டைக்காரர்கள் அல்ல என்பதை தெரிவித்துள்ள குடும்பத்தினர், உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர்.
Read More : தவெகவை போல் 2031இல் தமிழகத்தில் பாமக ஆட்சி..!! அன்புமணி ராமதாஸ் சூளுரை..!!



