தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தவெக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது இருதரப்புக்கும் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் எழுந்தன. அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் மாண்பையும், மரபையும் காற்றில் பறக்கவிட்டு, அமைச்சர்களையும் சக உறுப்பினர்களையும் நோக்கி ‘வாடா, போடா’ என ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வருவதாக கடும் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆவேசமாக பேசிய அவர், திமுக எம்எல்ஏ உடுமலை ஜெயக்குமார் அவையின் வரம்புகளை மீறி ஒருமையில் பேசியதோடு நில்லாமல், கையை ஓங்கிக்கொண்டு தன்னை அடிக்கப் பாய்வது போல் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டார். மேலும், தவெக உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய்யின் ஒரு பார்வை மட்டுமே போதுமானது என்றும், திமுகவினர் தொடர்ந்து வரம்பு மீறிச் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து அவையில் பெரும் கூச்சலும், அமளியும் நிலவியது. இதனையடுத்து, துணை சபாநாயகர், இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அவை விதிகளுக்கு உட்பட்டுப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்து சூழலை அமைதிப்படுத்தினார்.


