ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது பகவான் கிருஷ்ணரின் திருவுருவச் சிலைகளிலும் படங்களிலும் கையில் புல்லாங்குழலும், கிரீடத்தில் மயில் இறகு அலங்கரிக்கப்படுவது வழக்கம். கிருஷ்ணரின் முதன்மை அடையாளமாக மாறியுள்ள இந்த மயிலிறகின் பின்னணியில் பல ஆன்மீகக் கருத்துகளும் சுவாரசியமான கதைகளும் அடங்கியுள்ளன.
மயிலிறகின் பின்னணியில் உள்ள கதைகள்: பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைத்தபோது, அந்த இசையில் மயங்கிய மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடின. இசை நின்றதும், மயில்களின் ராஜா தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஒரு இறகை கிருஷ்ணரின் பாதத்தில் சமர்ப்பித்தது. அதை அன்போடு ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் தன் சிரசில் சூடிக்கொண்டார்.
ராதா ஒரு முறை கிருஷ்ணருக்கு மயில் இறகு பரிசாக வழங்கியதாகவும், அவர்கள் இருவரின் மாறாத நித்திய அன்பின் அடையாளமாக கிருஷ்ணர் அதை எப்போதும் தன் தலையில் அணிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மயில்கள் இயற்கையிலேயே தூய்மையின் வடிவாகக் கருதப்படுகின்றன. கிருஷ்ணர் பல உறவுகளைக் கொண்டிருந்தாலும், உள்ளத்தால் என்றும் தூய்மையானவராகவும் உலக நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராகவும் திகழ்வதால், மயிற் பீலி அவரின் அகத் தூய்மையைக் குறிக்கிறது.
மயிலிறகின் நடுவில் உள்ள ‘கண்’ போன்ற அமைப்பு, மனிதக் கண்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவையும், மாயையைக் கடந்து பார்க்கும் கிருஷ்ணரின் உலகளாவிய விழிப்புணர்வையும் உணர்த்துகிறது.



