சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணியாக இருந்த 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச் சென்ற காதலனே, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கணாபுரம் ஒன்றியம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23), கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அவருக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கோகிலா 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரியின் மகன் அம்மாசி என்பவர்தான் அந்தப் பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. விசாரணையின்போது, தவறை ஒப்புக்கொண்ட அம்மாசி கோகிலாவை தானே திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கோகிலாவை அம்மாசியுடன் அனுப்பி வைத்தனர்.
ஆனால், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கோகிலாவின் வீட்டிற்கு வந்த அம்மாசி, “கோகிலாவை காணவில்லை” என்று நாடகமாடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை பேராக்கவுண்டர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் எட்டிப் பார்த்தபோது சாக்குமூட்டை ஒன்று மிதப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த கொங்கணாபுரம் போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் அந்த மூட்டையை மீட்டுப் பிரித்துப் பார்த்தபோது, அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உறவினர்களை வரவழைத்து அடையாளம் காட்டியதில், அது காணாமல் போன கர்ப்பிணிப் பெண் கோகிலா என்பது உறுதியானது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் காதலன் அம்மாசியைப் பிடித்துப் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்தது. திருமணம் செய்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில், கோகிலாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியதை அம்மாசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


