கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெடுஞ்சாலையில் விதிகளுக்கு மாறாக லாரியை நிறுத்தி வைத்தது மிகப்பெரிய குற்றமாகும். இந்த விபத்து தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை மக்களின் பயன்பாட்டிற்கு முறைப்படி திறக்கப்பட்டுவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது; விபத்தை திசைதிருப்பி தப்பிக்கும் முயற்சிகள் காணப்படுகின்றன. ஒரு சாலையை பயன்பாட்டிற்கு திறப்பதற்கு தெளிவான நடைமுறைகள் உள்ளன; வாகனப் பாதையை மாற்றி செல்வதற்கான வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் அங்கு முறையாக வைக்கப்படவில்லை” என்றார்.
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை விட விபத்துக்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுப்பதே முக்கியம் என தெரிவித்தார். கேரள மாநில உள்துறை அமைச்சருடன் தொலைபேசியில் விரிவாக ஆலோசனை நடத்தினேன். இனி நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் 24 மணி நேர ரோந்து பணிகள் முடுக்கிவிடப்படும். நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தும் விதிமீறல்களுக்கு 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கடுமையான அபராதம் விதிப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் அஜாக்கிரதையாக வாகனங்களை நிறுத்துவோர் மீது இனி கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தார்.
Read More : இந்திய விமானப்படையை தாக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி..!! ஸ்கெட்ச் போட்டு சுட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படை..!!



