தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, இக்கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய 5 கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் கலந்துகொண்டு இம்முடிவை எடுத்தனர்.
முன்னதாக, தமிழகத்தில் தவெக அரசு அமைவதற்கு ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய இரண்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததுடன், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இக்கூட்டணியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் திமுக தலைமையிலான கூட்டணி “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், தற்போது அதற்கு இணையான கொள்கைப் பெயருடன் தவெக தனது புதிய கூட்டணியின் பெயரை அறிவித்திருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.



