மேற்கு பிலிப்பைன்ஸின் பாலவன் (Palawan) கடற்பகுதியில் புதன்கிழமை இரவு பயணிகள் படகு திடீரென தீப்பிடித்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்; 80-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மணிலாவிலிருந்து கோரோன் நோக்கி சென்ற ‘எம்.வி. ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற இந்த படகில் மொத்தம் 117 பயணிகளும், 17 பணியாளர்களும் இருந்ததாக பிலிப்பைன்ஸ் கடலோரப் காவல்படை தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, புதன்கிழமை நேற்று 43 பேர் மீட்கப்பட்டனர், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடலோரப் காவல்படை வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில், நடுக்கடலில் படகு முழுமையாகத் தீப்பிடித்து எரிவது பதிவாகியுள்ளது. மேலும் மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. படகின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் 117 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் இருந்ததாக கடலோரப் காவல்படை செய்தித் தொடர்பாளர் கம்மோடோர் நோயமி கயப்யாப் தெரிவித்தார்.
தீ விபத்திற்கான காரணம் என்ன?
மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, 80-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வருவதால் இந்தப் புள்ளிவிவரங்கள் மாறக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மோசமான வானிலை, மீட்புப் பணிகளுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. குறிப்பாக இரவில் வேகமான அலைகளும் கடல் நீரோட்டமும் இருந்ததாகக் கடலோரப் காவல்படை அதிகாரி தெரிவித்தார். மேலும், அவசர உதவி கோரிய இடத்திலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவில் இருந்த இந்த படகு, கடுமையான கடல் நீரோட்டம் காரணமாக அங்கிருந்து 7.68 கடல் மைல் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
7,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் பொதுமக்களும் சரக்குகளும் பயணிக்க ஃபெர்ரி எனப்படும் பயணிகள் கப்பல்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், அங்கு கடல் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜனவரியில், சொம்பாங்கா நகரத்திலிருந்து ஜோலோ தீவை நோக்கிச் சென்ற ‘எம்.வி. திரிஷா கெர்ஸ்டின் 3’ (MV Trisha Kerstin 3) பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் பாசிலான் மாகாணப் பகுதியில் மூழ்கியது. அந்த விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்தனர், பலர் மாயமான நிலையில் 293 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



