சீனாவின் கிழக்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ள குயிங்டாவோ (Qingdao) துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில், பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சரக்குக் கப்பலில் வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய ‘ஓஷன் மெலடி’ (Ocean Melody) என்ற சரக்குக் கப்பல், ‘சீனா ஸ்டேட் ஷிப்பில்டிங் கார்பரேஷன்’ நிறுவனத்தின் பழுதுபார்க்கும் தளத்தில் பராமரிப்புப் பணியில் இருந்தது. காலை 11:15 மணியளவில் திடீரெனக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர். 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 25 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். காயமடைந்த 5 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்; அவர்களின் நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பெரிய விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க தொழிற்சாலைகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்களில் பாதுகாப்புத் தணிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பிரதமர் லி சியாங் அறிவுறுத்தியுள்ளார்.



