15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு பழைய டிவி நிகழ்ச்சி மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறது. அதுவும், பழைய ‘ஜாக்பாட்’ என்ற பெயருடன் மட்டுமல்லாமல், அதே குஷ்பூவுடன்! இந்த முறை போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல; அவர்கள் தேர்வு செய்யும் கூட்டணி, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் விதம் என பல விஷயங்களும் வெற்றியை தீர்மானிக்க உள்ளன.
ஜெயா டிவியில் செப்டம்பர் 13-ம் தேதி முதல் ‘ஜாக்பாட்’ புதிய சீசன் ஒளிபரப்பாகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்குகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இதே நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களை சந்தித்த குஷ்பூ, தற்போது புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் மீண்டும் தொகுப்பாளராக திரும்பியுள்ளார்.
புதிய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இதில் பங்கேற்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமான ஒருவரைத் தேர்வு செய்து அவருடன் இணைந்து அணியாக களமிறங்கலாம்.
கணவன் – மனைவி, சகோதரர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் என எந்த உறவாக இருந்தாலும் இருவர் சேர்ந்து ஒரு அணியை உருவாக்க முடியும். இதனால் போட்டியின் போது அறிவு மற்றும் திறமைக்கு இணையாக, கூட்டாளிகளுக்கு இடையிலான புரிதலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருவரை ஒருவர் எவ்வளவு நன்றாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் வகையிலும் சில சுற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் இணைந்து செயல்படுவது, வேகமாக முடிவெடுப்பது, கொடுக்கப்படும் சவால்களை சமாளிப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் அணிகளுக்கு வெவ்வேறு சோதனைகள் காத்திருக்கின்றன.
நிகழ்ச்சிக்காக புதிய பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியின் அடிப்படை பொழுதுபோக்கு அம்சத்தை வைத்துக்கொண்டே, தற்போதைய டிவி நிகழ்ச்சிகளின் பாணிக்கு ஏற்ப போட்டிகள் மற்றும் சுற்றுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பரிசுத் தொகையும் இந்த சீசனின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக உள்ளது. பல்வேறு சுற்றுகளில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுடன், இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.10 லட்சம் வரை பரிசை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இதனால் ஆரம்பத்திலேயே போட்டியில் முன்னிலை பெறுவது முக்கியமாகிறது. ஒரு சுற்றில் செய்யும் தவறு அடுத்த கட்டத்துக்கான வாய்ப்பையே மாற்றிவிடலாம் என்பதால், ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு சுற்றும் சவாலாக அமைய உள்ளது.
இவற்றைத் தாண்டி, ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியின் பழைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு குஷ்பூதான். பல ஆண்டுகளுக்கு முன்பு போட்டியாளர்களுடன் கலகலப்பாக உரையாடி நிகழ்ச்சியை நகர்த்திய அதே குஷ்பூ, தற்போது மீண்டும் அந்த மேடைக்கு திரும்பியுள்ளார்.
90ஸ் கிட்ஸின் தொலைக்காட்சி காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து ரசித்த நிகழ்ச்சிகளில் ‘ஜாக்பாட்’ முக்கியமான ஒன்றாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த தொலைக்காட்சி பொழுதுபோக்கு சூழலும், குஷ்பூவின் தொகுப்பும் பலருக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
இப்போது அதே பெயர் மீண்டும் வந்தாலும், நிகழ்ச்சி முழுவதுமாக பழைய வடிவில் இருக்காது. புதிய போட்டிகள், புதிய அரங்கம், புதிய தலைமுறை போட்டியாளர்கள் மற்றும் ரூ.10 லட்சம் வரை பரிசு என பல மாற்றங்களுடன் நிகழ்ச்சி உருவாகியுள்ளது.
பழைய ரசிகர்களுக்கு இது நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பாகவும், புதிய தலைமுறைக்கு வித்தியாசமான குடும்பப் போட்டி நிகழ்ச்சியாகவும் அமையுமா என்பதுதான் எதிர்பார்ப்பு. ‘ஜாக்பாட்’ புதிய சீசன் செப்டம்பர் 13 முதல் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
Also Read: மாமனாரின் படுக்கையறையில் நடந்த சம்பவம்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்! போலீசில் சிக்கிய மருமகள்…



