அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டுப் பணியாளர்களை அழைத்துவரும் நிறுவனங்களுக்கான எச்-1பி விசா கட்டணத்தை $1,00,000 ஆக உயர்த்திப் பிறப்பித்த உத்தரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளார். அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், திறமையான வெளிநாட்டு வல்லுநர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எச்-1பி விசா திட்டத்தின் மூலம் பயன்பெறும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த $1,00,000 கட்டண உயர்வு காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் 92 சதவீதம் வரை சரிந்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்திய ஐடி வல்லுநர்களுக்கும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் மீண்டும் ஒரு சவாலான சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்கனவே கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்போதைய விசாவைப் புதுப்பிப்பவர்களுக்கு இந்தக் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இக்கட்டண உயர்வை எதிர்த்துப் பல்வேறு வணிக அமைப்புகள் தொடுத்த வழக்குகள் அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் காரணமாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் போன்ற பெருநிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன.



