திருநெல்வேலி மாநகராட்சி 36-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன் எழுதிய ராஜினாமா கடிதத்தால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.
கடிதத்தின் விவரம்:
எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார்நகர் ஆகிய பகுதிகளுக்கு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள சரோஜினி நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒருநாள்விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. மாநகராட்சி அதிகாரி, உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த நடைமுறையை மாற்றி அமைத்ததன் மூலம் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது குறித்து உயர் அதிகாரிகள், கட்சியினரிடம் எடுத்துக்கூறியும் பிரச்சினையை நிவர்த்தி செய்யவில்லை. தற்போது எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்து கூறினாலும் சாதி அடிப்படையில் அதை கண்டுகொள்ளவில்லை.
அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர தீர்வு இல்லை. குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி தூய்மை பணி, மின்விளக்கு பணி, கட்டுமான பணிகள் என்று அனைத்து பணிகளும் நடைபெறாமல் முடங்கியிருக்கிறது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் சாதி தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் எனது வார்டில் பிரச்சாரம் முதல் பல்வேறு நிலைகளில் நான் அவமானப்பட்டேன் என்பதை மிகுந்த மனவேதனையுடன் கூறிக்கொள்வதோடு, இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் எனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.