திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை அன்பகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் முடிந்த நிலையில், கட்சிப் பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே, இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் மீது வந்த புகார்கள் குறித்து அவர்களிடமே விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன நிர்வாகிகளிடம், தேர்தல் முடிவு வெளியானப் பிறகு பலரது பதவிகள் பறிக்கப்படுமென அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக, இளைஞரணியின் புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல வாரியாக அறிந்து கொள்ளும் நோக்கில், சென்னை உட்பட முதல் மண்டலம், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அடங்கிய 2-வது மண்டலத்துக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் வெளியாகும் முடிவுகள் அடிப்படையில், சரியாக செயல்படாத நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதே கருத்து இளைஞரணியிலும் எதிரொலித்துள்ளது.
Read More : வெறும் 2 மாவட்டங்களை கொண்ட இந்திய மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் இது தெரியாது..!!