செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அமலாக்கத்துறை பதில் அளிக்கத் திணறிய நிலையில், வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால், கைது செய்யப்பட்டார். தற்போது ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஜாமீன் மனுமீதான விசாரணை பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முதலில் இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனக்கு எதுவும் சம்பந்தம் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை வாதம் வைத்தது. செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் கூடுதல் ஆவணம் எப்படி வந்தது? பென் டிரைவில் உள்ள தரவுகள் சோதனையின் போது இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம்பெற்று இருக்கிறது என்பதை முதலில் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள். நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலைத் தான் எதிர்பார்க்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் தயார் செய்யப்பட்ட குறிப்பை நீதிபதிகளுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் வழங்கினர். அதற்கு, “அமலாக்கத்துறை குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது” என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார் லூத்ரா குற்றச்சாட்டினார். இதனையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Read more ; மாரடைப்பு வராமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!! இதயத்தை ஆரோக்கியமா வெச்சிக்கோங்க..!!