தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையில் 425 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, இந்தப் பணியிடங்களுக்கு இன்று முதல் மார்ச் 10ஆம் தேதி வரை www.mrb.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு கணினி வழி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1.7.2019 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 59 வயதுக்குள் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வித் தகுதியை பொறுத்தவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் இளநிலை அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வாகும் மருந்தாளுநர்களுக்கு மாத சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.