நீங்கள் நில உரிமையாளராக இருந்தால், கட்டாயம் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட நிலம் தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பது அவசியம். ஏனென்றால், பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலத்தில் அளவு உள்ளிட்ட முக்கியமான பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப் பத்திரம், பட்டா பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். சென்னையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப் பத்திரம், பட்டா பெறுவதற்காக 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முகாம் இன்றுடன் (பிப்.28) முடிவடைய உள்ள நிலையில், ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
அதில், இன்று (பிப்.28) வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப் பத்திரம், பட்டா பெறுவதற்காக மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தியாகராய நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.