14 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த தாய் மற்றும் சகோதரன் மற்றும் திருமணம் செய்து கொண்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது அதிகாரிகள் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியும், திருமணம் செய்தவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், சில கிராமங்களில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், தற்போது ஓசூரில் 14 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதஷ். இவருக்கு வயது 30. கடந்த 3ஆம் தேதி மாதேஷுக்கும், 14 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தாய் நாகம்மாவும் (29) உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் மலைக் கிராமத்துக்கு மாதேஷும், 14 வயது சிறுமியும் வந்துள்ளனர்.
ஆனால், இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. அவரை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர் இந்நிலையில், நேற்று காலை மாதேஷின் வீட்டிலிருந்து தப்பியோடிய சிறுமி, அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தெரிந்து கொண்ட மாதேஷின் உறவினர்கள், பாட்டி வீட்டிற்குள் புகுந்து, சிறுமியை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். அப்போது சிறுமி கதறி அழுதுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், சிறுமியின் பாட்டி, தேனிகனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா ஆகியோரை கைது செய்தனர்.