கிராம நத்தம் நில ஆவணங்களை ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றும்போது குழப்பங்களை தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 2000-க்கு பிறகு பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டன. ஆனால், கிராம நத்தம் உள்ளிட்ட சில நிலங்களுக்கான பட்டாக்கள் மட்டும் மேனுவல் (Manual) முறையில் இருந்ததால், அதையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி, பட்டாவை பார்க்கும் இணையதளத்தில், நத்தம் நிலங்களுக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், சில குறிப்பிட்ட வகை நிலங்களின் பட்டா விவரங்கள், ஆன்லைனுக்கு மாறாமல் உள்ளது. இதனால், நத்தம் நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும், வழக்கமான பட்டா நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஒரு கிராமத்தில் உள்ள நத்தம் நிலத்துக்கு 127 என்ற சர்வே எண், ‘மேனுவல்’ ஆவணத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதே கிராமத்தில் வழங்கப்பட்ட வழக்கமான பட்டா நிலத்துக்கும் 127 என்ற சர்வே எண் இருக்க வாய்ப்புள்ளது. இதனால், நத்தம் நில ஆவணங்களை, ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றும்போது, கிராம அளவில் அனைத்து நிலங்களுக்கும், தனித்தனி சர்வே எண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அந்த கிராமத்தில், புழக்கத்தில் உள்ள இறுதி சர்வே எண்ணுக்கு அடுத்த எண்களாக புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்படும். இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சர்வே எண் குழப்பம் தீர்ந்தால், அனைத்து நில ஆவணங்களையும், இனி ‘ஆன்லைன்’ முறையில் எளிதாக பார்த்துக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள்” தெரிவித்துள்ளனர்.