பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கி 17ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதேபோல் 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்.9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.15ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையும் நடத்தப்படவுள்ளன.
இது தவிர கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறையை பொறுத்தவரை 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதலும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போதே மாணவர்கள் பல திட்டங்களை போட்டு வைத்துள்ளனர். இந்த விடுமுறையில் எங்கு சுற்றுலா செல்லலாம் என யோசித்து வருகின்றனர். வழக்கமாக தமிழ்நாட்டில் கோடை விடுமுறை என்றாலே கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.