தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த பொது நல வழக்கில், ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக் கம்பங்களையும், கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள் தேசிய – மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதையும் சுட்டுக் காட்டினார்.
மேலும், இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும், அப்படி அகற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
Read More : மாதம் ரூ.34,000 சம்பளம்..!! கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!