மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான சமூக வலைதள விமர்சகர் ஷாமிக் அதிகாரி, பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘நான்சேன்’ (Nonsense) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது சமூக வலைதளப் பக்கங்கள், அரசியல் நையாண்டிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கு எதிரான காரசாரமான விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றவை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வந்த ஒருவரே, தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை ஷாமிக் அதிகாரி தனது வீட்டில் சுமார் 20 மணி நேரம் சட்டவிரோதமாக சிறை வைத்ததாக புகார் எழுந்தது. அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியதுடன், பலமுறை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்புகாரை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பெஹாலா காவல்துறையினர், கடந்த 4-ஆம் தேதி ஷாமிக் அதிகாரியை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை முதற்கட்ட ஆதாரங்களாக போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனை ஆய்வு செய்த அலிப்பூர் நீதிமன்றம், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஷாமிக் அதிகாரியை வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஷாமிக் அதிகாரியின் வழக்கறிஞர், “ஷாமிக்கும் அந்தப் பெண்ணும் நீண்ட கால நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவர் அந்தப் பெண்ணை அறைந்துள்ளார். இது ஒரு சாதாரண மோதலே தவிர, இதில் பாலியல் வன்புணர்வு ஏதும் நடக்கவில்லை” என்று வாதிட்டுள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் நீதியைப் பற்றிப் பேசி வந்த ஒருவர் மீதே இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.



