அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அதோடு நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்துவதற்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த 3 மாதங்களாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் குண்டு வெடிக்கும் காட்சி நேற்று படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டு சத்தம் கேட்டதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதற்கிடையே, இந்த சூட்டிங் தொடர்பாக படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் தெரிந்ததும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனே படப்பிடிப்பை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. அதோடு 15 நாட்கள் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.