ஜப்பான் நாட்டில் வரும் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு நிகழப் போவதாக நவீன பாபா வங்கா ரையோ தத்சுகி தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பலர் ஜப்பான் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.
எதிர்காலத்தை கணித்து கூறும் தீர்க்கதரிசிகள் என்றால் நாங்கள் நினைப்பது நாஸ்டர்டாமஸ், பாபா வங்கா போன்றவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து இப்போது ‘ஜூனியர் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரையோ தத்சுகி, தனது கனவுகளில் தோன்றிய விஷயங்களை “The Future I Saw” என்ற புத்தகமாக வெளியிட்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது கணிப்புகள் பலவற்றும் நடந்தது போலப் பதிவாகியுள்ளதால், இனி என்ன என்பதை உலகமே உணர்ச்சிப் பூர்வமாக எதிர்நோக்குகிறது.
அந்த வகையில், 2025 ஜூலை 5ஆம் தேதி ஜப்பானில் பேரழிவு ஒன்று நிகழும் என தத்சுகி எழுதியிருப்பது இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ஃபிரெட்டி மெர்குரியின் மரணம், இளவரசி டயானாவின் கார் விபத்து, கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றையும் தத்சுகி முன்கூட்டியே கணித்திருந்தார் என்பதால்தான், ஜப்பான் சம்பவமும் உண்மையாகிவிடுமோ என மக்களிடம் அச்சம் உருவாகியுள்ளது.
இதன் நேரடி விளைவாக, ஜப்பானில் சுற்றுலா திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் விமானங்களுக்கான முன்பதிவுகள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் இறுதியில் தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை மட்டும் 83 சதவீத பயண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தவர்களே பெரும்பாலும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்கம், உண்மையில் நிகழப்போகும் பேரழிவை விடவும் அதிகமானது என்றே சொல்லலாம். தகவலில்லா பயம், நம்பிக்கைக்குரிய கணிப்பு, இணையம் வழி பரவல் – இவை மூன்றும் சேர்ந்து ஜப்பானின் சுற்றுலா பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் மீண்டும் அதிரடியான வகையில் பரவும் என தத்சுகி கணித்திருப்பது, பொதுமக்கள் மட்டுமின்றி சுகாதார வல்லுநர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.