மகாராஷ்டிரா மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றான எல்லோரா குகைகள், இந்தியச் சிற்பக் கலையின் பெருமையை உலகறிய செய்கின்றன. அஜந்தா, எலிபண்டா போன்ற புகழ்பெற்ற குகைகளைப் போலவே, எல்லோரா வெறும் கற்களால் உருவான இடமல்ல. இது பண்டைய சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்பட்ட காவியம்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், புத்த மதம், சமணம் மற்றும் சைவம் என 3 முக்கிய மதங்களின் கலாச்சார சின்னங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, அக்காலத்தின் மத நல்லிணக்கத்தை உலகிற்கு உணர்த்துகிறது.
உலகை வியக்க வைக்கும் கைலாசநாதர் கோவில் :
எல்லோரா குகைகளில் உச்சகட்ட பிரம்மாண்டத்தைக் கொண்டது, கைலாசநாதர் கோவில். இது உலகில் ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோவில் என்ற பெருமையைப் பெறுகிறது. ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாம் கிருஷ்ணா மன்னரின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 757-783) சுமார் 20 ஆண்டுகள் செலவில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. சிவபெருமானின் உறைவிடமான கைலாச மலையை அப்படியே பூமிக்குக் கொண்டு வரும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டிடக்கலையின் தனித்துவமான அம்சங்களான பிரம்மாண்டமான தூண்கள், மண்டபங்கள், சன்னல்கள் மற்றும் நடுவில் இருக்கும் சிவலிங்கம் ஆகியவை இந்தக் குடைவரைக் கோவிலின் ஆச்சரியமூட்டும் அம்சங்களாகும். குறிப்பாக, பார்வதியுடன் வீற்றிருக்கும் சிவனையும், மலையைத் தூக்க முயலும் ராவணனின் கம்பீரமான சிற்பங்களும் இங்குள்ள கலை நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு காலங்களைச் சேர்ந்த ஓவியங்களின் சிதறல்களும் இன்றும் மண்டபத்தின் கூரையில் பாதுகாக்கப்படுகின்றன.
சரனாந்திரி மலையில் அமைந்துள்ள இந்த எல்லோரா வளாகத்தில், 17 இந்து குகைகள், 12 பௌத்த குகைகள் மற்றும் 5 சமண குகைகள் என மொத்தம் 34 குகைகள் மட்டுமே பொது மக்கள் பார்வைக்கு உள்ளன. இவை கி.பி 6 முதல் 9-ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அருகருகே அமைந்திருக்கும் இந்த மூன்று மதச் சின்னங்களும், அப்பகுதியில் நிலவிய அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாகத் திகழ்கின்றன.
சுமார் 200 ஆண்டுகள் உழைப்பில், மனிதர்களால் கட்டப்பட்டதா என்று வியக்க வைக்கும் இந்தக் கலைப் பொக்கிஷத்தை, 1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இதன் தனித்துவமான கட்டமைப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக, இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.
Read More : மிளகாய் அரைத்து பூசினால் மனக்குறையை நீக்கும் மாசாணியம்மன்..!! கோவில் எங்க இருக்கு தெரியுமா..?



