மருத்துவர்களால் ஆரம்பத்தில் நோயைக் கண்டறியத் தவறியபோதிலும், Grok AI சாட்போட் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 49 வயது மதிக்கத்தக்க ஒருவர், மருத்துவர்களால் தனது கடுமையான நோயைக் கண்டறிய முடியாத நிலையில், எலான் மஸ்க்கின் Grok AI தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார்.
“tykjen” என்ற பயனர் பெயரில் ரெடிட்டில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனிப்பட்ட சுகாதார முடிவுகளில் AI-ன் பங்கைப் பற்றி விளக்கினார். அந்த நபர்24 மணி நேரத்திற்கும் மேலாக குடல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அந்த வலியை பிளேடால் அறுப்பது போன வலி என்று விவரித்தார். அவரால் படுக்க முடியவில்லை, தரையில் கால்களை மடித்து, அவற்றை மார்பு வரை தூக்கியபோது மட்டுமே அவருக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது.
இருப்பினும், அவருக்கு காய்ச்சல் அல்லது ரத்தம் போன்ற வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை. கவலைப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். மருத்துவர் அவரது வயிற்றைப் பரிசோதித்து, அமிலத் தடுப்பு மாத்திரைகளை பரிந்துரைத்து, அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ஆனால் வலி குறையவில்லை. வீட்டிற்குத் திரும்பிய அவர், xAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான Grok AI-ஐ அணுகினார். அன்று இரவு, அவர் தனது அறிகுறிகளை விரிவாக விவரித்தார். Grok உடனடியாக அந்த அறிகுறிகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு, குடலில் துளை விழுந்த புண் அல்லது அசாதாரண குடல் அழற்சி போன்ற நிலைகளை பரிந்துரைத்தது. குறிப்பாக, அது அபாயகரமான அறிகுறிகளைக் கண்டறிந்து, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று சிடி ஸ்கேன் செய்யுமாறு பரிந்துரைத்தது.
அந்தத் தகவலுடன், அவர் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். இந்த முறை, அவர் தனது அறிகுறிகள், கவலைகள் மற்றும் இமேஜிங் பரிசோதனைக்கான கோரிக்கை ஆகியவற்றைத் தெளிவாக விளக்கினார். மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்ய ஒப்புக்கொண்டனர். அதன் முடிவுகளில், அவரது குடல்வால் வெடிக்கும் நிலையில் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர் அவசரகால லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அது சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது. அதன் முடிவு அற்புதமாக இருந்தது. குடல்வால் அகற்றப்பட்ட பிறகு, வலி முற்றிலும் நீங்கியது. ரெடிட்டில் அவர் விவரித்தபடி, மயக்க மருந்தில் இருந்து எழுந்தபோது அவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார். சிகிச்சையளிக்கப்படாமல் இருந்திருந்தால் இது உயிருக்கே ஆபத்தான ஒரு நிலை என்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார்.
AI பொதுவாக நோயை கண்டறிவதோ அல்லது அறுவை சிகிச்சை செய்வதோ இல்லை என்று அவர் கவனமாகக் குறிப்பிட்டார். ஆனால், ஆரம்பத்தில் கவனிக்கப்படாத ஒரு முறையை அடையாளம் காணவும், மேலும் பரிசோதனைகளை பரிந்துரைக்கவும் அது தனக்கு தைரியத்தையும், சரியான வார்த்தைகளையும் வழங்கியதாக அவர் விளக்கினார். கடுமையான வலி இருந்தால், அது சிறிது காலமாக புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு பிரச்சனையாகத் தோன்றினால், காத்திருக்க வேண்டாம். கேள்விகளைக் கேளுங்கள்.. நீங்களே உதவி தேடுங்கள்.
தற்போது மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் இது போன்ற கதைகள், ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது செயற்கை நுண்ணறிவு ஒரு இரண்டாவது கருத்தாகச் செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், மருத்துவ சிகிச்சைக்காக நாம் செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பி இருக்கக்கூடாது.



