நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தத இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற 2-வது மாநில மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வீட்டின் மொட்டை மாடியில் நேற்று ஒரு இளைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை கவனித்த விஜய் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள் அவரை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், அந்த இளைஞரை நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இவர் எப்படி விஜய் வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடி வரை சென்றார் என்பது தெரியவில்லை. இருப்பினும், அவரை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.



