சூர்யா, விக்ரம், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. கடந்த 2003ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில், விக்ரம்-சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். மேலும், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பாபா திரைப்படத்திலும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மனைவி, மகளை பிரிந்து விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வரும் வி.ஏ.துரை, சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வரும் இவர், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் உதவியால், சிகிச்சை பெற்று ஓரளவிற்கு உடல்நலம் தேறி, எழுந்து உட்காரும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இருப்பினும் காலில் ஆறாத ரணத்துடன், புண்கள் ஆறாத நிலையில், உடல் மெலிந்து அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு உதவி கேட்டு அவரது நண்பர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாயும், கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டினர்.
இதையடுத்து, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் வி ஏ துரையை, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும், நான் பார்த்துக்கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் எனவும் நம்பிக்கை அளித்துள்ளதோடு, ஜெயிலர் படபிடிப்பு முடிந்த பிறகு நேரில் வந்து சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.