விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் இருக்கும் கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (22). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்ட பிரதாப், அவரிடம் நைசாக பேசி பாக்கெட் சாராயத்தை வாங்கி கொடுத்து வீட்டில் மயக்கம் போட வைத்துள்ளார்.
அதன் பிறகு, மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது கடந்த சில காலமாக தொடர்ந்து வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதாப்பின் நண்பர் புவனேஷ் என்பவருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவியை பார்த்து புவனேஷ் ஆறுதலாக பேசுவது போல நடித்தார். அதன் பிறகு பிரதாப்பை போலவே மாணவியின் தந்தைக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அடிக்கடி இரண்டு இளைஞர்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து போவதை பார்த்த கிராம மக்கள் மாணவியை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, நேற்றிரவு துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போதை தெளிந்து காலையில் எழுந்த மாணவியின் தந்தை தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.மாணவி பயன்படுத்திய செல்போனை சோதனை செய்த போது புவனேஷ் மற்றும் பிரதாப் இருவரிடமும் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.