பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர், “சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் பேசினார். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி ஆளுநர் ரவி பேசத்தொடங்கினார். ஆளுநர் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சியினர் கூச்சல், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர், பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கூச்சலில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் உரையாற்றும் ஆளுநரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். இந்நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.