சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (41). திருமணம் ஆகாத இவர், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் பெரியமேடு, ஆர்.எம். சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மதிய உணவு சாப்பிட்டு மது அருந்தியுள்ளனர். பின்னர் அன்று இரவு 9.30 மணியளவில் பிரியா விடுதியின் மேலாளர் கபீரிடம், என்னுடன் வந்த பிரகாஷ் அதிகளவில் மது குடித்ததால் மயங்கி விழுந்து விட்டார் எனக்கூறி அழுதுள்ளார். உடனே கபீர் ஓடிச்சென்று பிரகாஷை பார்த்த போது சுயநினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், பிரகாஷை பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனால், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பிரகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், பிரகாஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் சுயநினைவின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரகாஷின் கள்ளக்காதலி பிரியாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரியாவுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளது தெரியவந்தது. பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் மகன்களை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டேரியில் வேலை செய்யும் போது பிரகாஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரகாசுக்கு திருமணம் ஆகாததால் பிரியாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் அறை எடுத்து தங்கி மதுபோதையில் உல்லாசமாக இருந்தபோது பிரியாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது குறித்து அவர் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரியா, பிரகாஷை சுவரில் தள்ளியும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்து விட்டு, அதை மறைப்பதற்கு நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.