கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கோவில்புரத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான கண்ணன் (44), கார்த்திகை வடலி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நிர்வாண நிலையில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு நடத்திய அதிரடி விசாரணையில், மதுபோதையில் நடந்த கொலை அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தன்று இரவு, கண்ணனும் கோணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிலி என்பவரும் அந்த தென்னந்தோப்பில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதை உச்சத்திற்குச் சென்ற நிலையில், ஜான்சிலி கண்ணனை ஓரினச் சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த ஜான்சிலி மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த வெறிச்செயலுக்கு அங்கிருந்த இரண்டு சிறுவர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததை உறுதி செய்த கொலையாளிகள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் ஜான்சிலி மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில், கொலையில் நேரடி தொடர்பு இருந்த ஜான்சிலியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அவருக்கு உதவிய இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விசாரணையில் தொடர்பில்லை என தெரிந்த மற்றொரு நபர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



